தமிழக செய்திகள்

பூந்தமல்லி அருகே இரண்டு பைக் மோதி கோர விபத்து

இரண்டு மோட்டர் சைக்கிள்கள் மோதியதில் ஹோட்டல் மேலாண்மை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர் உயிரிழந்தார்.

சென்னை,

நெற்குன்றம், மேட்டுக்குப்பைதச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46) கொத்தனார். இவரின் மகன் புஷ்பராஜ் (வயது 19) அருகம்பாக்கத்தில் உள்ள அண்ணாமலை கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேலாண்மை 2-ஆம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த 11-ந்தேதி இரவு 11 மணியளவில் புஷ்பராஜ் தனது பைக்கில் தலைக்கவசம் அணியாமல், 2 பேரை பின்னால் அமரவைத்து, அமைந்தகரை நோக்கி ஓட்டிச் சென்றார்.

விபத்து

இவருக்கு பின்னால் பாடியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளராகவும், பகுதி நேர ரேபிட்டோ ஓட்டுநராகவும் பணிபுரியும் , குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர், முத்து மணிகண்டன் (வயது27) பைக் ஓட்டிச் சென்றார்.

அப்போது கோயம்பேடில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு அருகே, பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முத்து மாணிக்கம் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாடி சென்று கொண்டிருந்த புஷ்பராஜின் பைக்கில் பயஙகரமாக மோதினார்.

படுகாயம்

புஷ்பராஜ் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் தலையிலும் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. புஷ்பராஜுடன் பின்னால் அமர்ந்து பயணித்த 2 சிறுவர்களும் தலைக்கவசம் அணியவில்லை.

ஆனாலும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் புஷ்பராஜின் பைக்கில் மோதிய முத்து மணிகண்டனுக்கும் இடது கையில் சிறிய சிராய்ப்புகளே ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உயிரிழப்பு

இதனைத்தொடர்ந்து உடனடியாக படுகாயமடைந்த புஷ்பராஜை மட்டும் மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புஷ்பராஜின் இழப்பு அவரது குடும்பத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. கோயம்பேடு போலீசார் இந்த சம்பவம் குறித்து முதன்மை குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.