சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
17-வது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு வரும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
இந்த புத்தாக்க பயிற்சியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவை மரபுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். ராஜினாமா செய்த 4 எம்.எம்.எல்.ஏ.க்களின் புகார் கடிதங்களையும் இணைத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
17-வது சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் அர்லேகர் உரையுடன் வரும் 18-ந் தேதி கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்த புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.