தமிழக செய்திகள்

வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசிய 2 சிறுவர்கள் கைது

வந்தே பாரத் ரெயிலில் கற்களை வீசியதை சிறுவர்கள் ஒப்புக் கொண்டனர்.

திண்டுக்கல்,

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த ரெயில் திண்டுக்கல் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, தண்டவாள பகுதி அருகே நின்ற சிறுவர்கள் ரெயில் பெட்டியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்களை வீசிச்சென்றனர். பின்னர் இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் வந்தே பாரத் ரெயிலில் கற்களை வீசியது திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியை 12, 14 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று அந்த சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வந்தே பாரத் ரெயிலில் கற்களை வீசியதை சிறுவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.