சென்னை,
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.