கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவிலுக்கு சென்று திரும்பியபோது காட்டு யானை தாக்கி பூசாரி உட்பட இருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோவிலுக்கு சென்று திரும்பியபோது, காட்டு யானை தாக்கி பூசாரி உட்பட இருவர் பலியாகினர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி குரூப் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் சித்தன். இவரது மகன் ராஜப்பன் (40 வயது). பூசாரி. இவரது குடும்பத்தினர் சித்தப்பாஜி என அழைக்கப்படும் சிவன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம். மேலும் கோவிலில் பூஜையும் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் ராஜப்பன் கோவிலுக்கு சென்று பூஜை செய்தார்.

பின்னர் மாலை வெகு நேரமாகியும் ராஜப்பன் வீடு திரும்பவில்லை. இது பற்றிய தகவலின்பேரில், இரவு வனத்துறையினர் தேடியபோது கல்குவாரி பகுதியில் ராஜப்பன் உயிரிழந்து கிடப்பதை பார்த்தனர். விசாரணையில் கோவிலில் ராஜப்பன் பூஜை செய்துவிட்டு இரவில் வீடு திரும்புவதற்காக குறுக்கு வழியில் சென்றபோது காட்டு யானை தாக்கி இறந்தது தெரியவந்தது.

இதேபோல கோத்தகிரி அருகே உள்ள தாளமொக்கை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சின்னான் மகன் ரகு (28 வயது). இருளர் பழங்குடியினரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ரகு நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கிராமம் அருகே வனப்பகுதியையொட்டி ஆற்றோரம் உள்ள மாசியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை ஒன்று ரகுவை தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.