காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நேற்று முன்தினம் காளிமுத்து என்பவர் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து காளிமுத்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காரைக்குடி பகுதியில் மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் புனியா, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் மோட்டார்சைக்கிள் திருட்டை கட்டுப்படுத்த தீவிர விசாரணை நடத்தி வந்தனர். காரைக்குடி நகரில் பல்வேறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
இதையடுத்து பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நாகராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது.
பின்னர் நாகராஜை கைது செய்து போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுடம் இருந்து 18 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதும் 56-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.