கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

உதயநிதி பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு அறிவுறுத்தலையும் மீறி அவசரம் அவசரமாக காவல்துறையை வைத்து தமிழக அரசு உதயநிதி ஸ்டாலினை கைதுசெய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து தவெகவினர் ஒருபுறமும், தற்போது அவரின் கைதை கண்டித்து திமுகவினர் மறுபுறமும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளை மறந்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தனிப்பட்ட தாக்குதல்களையும், தரக்குறைவான விமர்சனங்களையும் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் முன்னேடுத்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இதனிடையே நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் குரல்வளையையும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே உதயநிதி ஸ்டாலினின் கைதை பார்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு பிரச்சனையாக இருப்பினும் சட்ட ரீதியாக சந்திப்பதை தவிர்த்து, காவல்துறையை ஏவி அதிகார துஷ்பிரயோகத்தை கையாளும் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிப்பதோடு, அவரது கைதால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டும் என காவல்துறையையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.