தமிழக செய்திகள்

உதகை: கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதித்து இருக்கிறது.

உதகை,

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக மதிய நேரங்களில் வெளியில் செல்வதே சவாலாக இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயில் காரணமாக மக்கள் குளிர்ச்சியான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட முதுமலையில் உள்ள தெப்பக்காடு சாலையில் இருந்து மசினகுடியை கடந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில்கொண்டு கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமானது இந்த கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

இதனால் போலீசார் தெப்பக்காடு பகுதியில் சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். அந்த பாதை வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி கூடலூர் நெடுஞ்சாலை வழியாக உதகைக்கு திருப்பிவிடுகின்றனர்.