சென்னை,
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதித்ததாக குற்றம்சாட்டிய அவர், "தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.