தமிழக செய்திகள்

நாவடக்கம் இல்லாதவர் தான் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் ஆனந்த் விமர்சனம்

அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா முதல்-அமைச்சரை பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகளை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை என பேசினார். இந்நிலையில் இது குறித்துதவெக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

நாவடக்கம் இல்லாதவர்

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.

தளபதியின் நாகரிக வளர்ப்பு

Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.