தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் மதியம் அந்தப் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ஜன்னல் கம்பியில் தனது வேஷ்டியால் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கோவில் போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபரின் அடையாளத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.