தமிழக செய்திகள்

நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

சென்னை,

அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் வரும் நவம்பர் 15-ந்தேதியில் இருந்து சீருடை அணிய வேண்டும் என்றும், அதற்கான வண்ணத்தை நிர்ணயித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில் அமைச்சரின் அறிவிப்பு

இதுகுறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டடிருப்பதாவது:

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

3 செட் சீருடைகளுக்கு படி ரூ.6 ஆயிரம்

அதன்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை முறையை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருவருக்கு மூன்று செட் சீருடைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் சீருடைகளை கொள்முதல் செய்தல், அளவு எடுத்தல், தைத்தல் மற்றும் வினியோகம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சீருடை படி வழங்கப்படும். துணி மற்றும் தைப்புக் கட்டணம் உள்பட ஒரு செட்டிற்கு ரூ.2 ஆயிரம் வீதம், ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

நவம்பர் 15-ந்தேதி முதல் சீருடை கட்டாயம்

மேற்பார்வையாளரின் சீருடை, சட்டை இளம் நீலம் வண்ணத்திலும், பேண்ட் கடற்படை நீலத்திலும் இருக்கும். விற்பனையாளர், உதவி விற்பனையாளரின் சீருடை சட்டை-இளம்பழுப்பு நிறத்திலும், பேண்ட்-கரும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். 15.11.2026 முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை வேலை நேரத்தில் கட்டாயம் அணிய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT