சென்னை,
ஸ்ரீபெரும்புதூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழு இஎஸ்ஐ சுகாதாரத் திட்டங்கள் - வரும் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா.
நாளை மறுநாள் தெலங்கானா மாநிலம் சனத்நகரில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகமான இஎஸ்ஐசி (ESIC) மருத்துவமனையிலிருந்து, நாடு முழுவதும் உள்ள ஏழு தொழிலாளர் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ - ESI) சுகாதார திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, சனத்நகரில் உள்ள இஎஐஸ்ஐசி மருத்துவமனையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைப்பார்.
அதன் பின் ஆறு திட்டங்களையும் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
* அசாம் மாநிலம் பெல்டோலாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை;
* ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை;
* ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை;
* குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம், கிளை அலுவலகம்;
* ராஜஸ்தான் மாநிலம் கோட்டா உத்யோக் நகரில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம், கிளை அலுவலகம்;
* ராஜஸ்தான் மாநிலம் பவானி மண்டியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகம்.
சுமார் ரூ. 668 கோடி மதிப்பிலான இந்த மருத்துவ திட்டங்கள், நாடு முழுவதும் உள்ள ஏறத்தாழ 53 லட்சம் பயனாளிகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும்.
தொழிலாளர் நல துறைக்கான மத்திய இணைமந்திரி ஷோபா கரந்த்லாஜேவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் சனத்நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையின் புறநோயாளி பிரிவு கட்டடத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த கட்டுமான தொழிலாளர்களை டாக்டர் மாண்டவியா கௌரவிப்பார். மேலும், தொழிலாளர் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், அவர் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு பண பலன்களையும் வழங்குவார்.
ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை, இந்தியாவின் முன்னணி உற்பத்தி, மின்னணு மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, எக்ஸ்-ரே பிரிவு, ஆய்வக மருந்தகம் போன்ற வசதிகள் கிடைக்கப்பெறுவதால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்பீடு பெற்ற நபர்கள் மருத்துவ வசதிகளை பெறுவது எளிதாகும்.