தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்க வாய்ப்பு இல்லை: என்ன காரணம்?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இம்மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்க வாய்ப்பு இல்லை. அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நோக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். மேலும், இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த குழந்தைகளுக்கு 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு கிராம் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும்.

செப்டம்பர் 15-ல் தொடக்கம் இல்லை

இதற்காக, பட்ஜெட்டில் அடுத்த ஓராண்டுக்கு ரூ.755 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரத்திற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரம் செய்து கொடுக்கும் ஒப்பந்தத்தை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவீதம் அளவுக்கும், கல்யாண் ஜூவல்லரி நிறுவனம் 30 சதவீதம் அளவுக்கும் பெற்றுள்ளன. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவதற்கு 5 நாட்களே இடைவெளி உள்ள நிலையில், குறிப்பிட்ட நாளில் (செப்டம்பர் 15) திட்டத்தை தொடங்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்?

அதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக கூறப்படுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை (வியாழக்கிழமை) லண்டனுக்கு புறப்படும் அவர், சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து லண்டன் போய் சேருகிறார். லண்டன் பயணத்தின்போது, சில்வர்ஸ்டோனில் நடைபெறும் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கண்டுகளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் 16-ந் தேதி வரை 7 நாட்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உசிலம்பட்டியில் 25-ந் தேதி தொடக்கம்

அப்படிப்பார்த்தால், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 16-ந் தேதி இரவு தான் லண்டனில் இருந்து சென்னை திரும்பும் நிலை உள்ளது. நிலைமை அவ்வாறு இருக்கும்போது, அதற்கு முந்தைய நாளான (செப்டம்பர் 15) அண்ணா பிறந்த நாளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அவர் தொடங்கிவைக்க சாத்தியம் இல்லை. இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் சீர் வழங்கும் பழக்கம் பிரபலம் என்பதால், குறிப்பிட்ட ஊர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

முன்னதாக, செப்டம்பர் 17-ந் தேதி (லண்டனில் இருந்து திரும்பிய அடுத்த நாள்) விருதுநகரில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாளில், அவர் படித்த பள்ளியில், காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார். அதே நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற இருப்பதால், முதலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, அதன்பிறகு காலை உணவு திட்டத்தை தொடங்கிவைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் செல்வார் என்றும் கூறப்படுகிறது

SCROLL FOR NEXT