கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ஜெயபிரகாஷ் (30 வயது). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்சம் பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஜெயபிரகாஷ் வீட்டில் இருந்த விஷத்தை (எலி பேஸ்ட்) எடுத்து குடித்துவிட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.