புதுடெல்லி,
விமான பயணத்தின் போது விதிகளை மீறி அத்துமீறலில் ஈடுபடுவோர் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(டி.ஜி.சி.ஏ.) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ரவீந்திர குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், விமானத்தில் புகை பிடித்தல், மது அருந்துதுதல், பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள், தகாத முறையில் நடந்து கொள்ளுதல் அல்லது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சம்பவங்களை கையாள்வது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள் அல்லது போதைப் பொருட்களை உட்கொள்வது, பயணிகளிடம் உடல்ரீதியாக அச்சுறுத்தல், ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகளையும் விமான நிறுவனங்கள் வகைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என்றும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.