சென்னை,
தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது கன்னிப்பேச்சில் பேசிய சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமார், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் சட்டசபைக்குள் வந்திருப்பார் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தவெக எம்.எல்.ஏ., கடந்த ஆட்சியில் எங்களின் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். 1.31 கோடி பெண்கள் மனதில் மு.க. ஸ்டாலின் குடியிருக்கிறார்" என்றார்.
இதையடுத்து திமுக கொறடா எ.வ.வேலு பேசியதாவது; “சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்புவதற்கு முன்பாக கண்ணியத்திற்கு எதிராக பேசப்படும். வார்த்தைகள் சபாநாயகர் அறைக்கு சென்ற பின்பாக ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படும். தற்போது எல்லாமே நேரலை செய்யப்படுவதால் சபாநாயகர் அவ்வப்போதே ஆலோசித்து கண்ணியத்திற்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளை நீக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், "பேசும்போது சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகப்பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்" என அறிவுறுத்தினார்.