விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு 7 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் அருள், நகர செயலாளர் சம்பந்தம், தி.மு.க. நகர இலக்கிய அணி பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு உறியடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, சாமி வீதியுலா நடைபெற்றது.