தமிழக மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "குஜிலியம்பாறை வட்டாட்சியர் அவருடைய சொந்த விருப்பு, வெறுப்பின் கீழ் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அவர் இன்னும் 6 மாத காலத்தில் ரிட்டையர் ஆக போகிறார். இது தொடர்பாக நான் சிபிஎம் தலைவர்களிடம் பேசினேன். அந்த வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். இது கவனத்திற்கு வந்த உடனே.. சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டு, அவரும் இடமாற்றம் செய்யப்பட்டு.அவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
சர்ச்சையை கிளப்பிய வட்டாட்சியரின் அறிக்கை, "திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உத்தரவு வெளியாகியிருந்தது.
அதேபோல இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சியின் அமைப்பின் கீழ் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறையிலிருந்து அறிக்கை வெளியாகியிருந்தது. இந்த இரண்டு அறிக்கைகளும் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு பின்வாங்கப்பட்டன. மட்டுமல்லாது இந்த அறிக்கை வெளியாக தமிழக தலைமை செயலாளர் சாய் குமார்தான் காரணம், அவர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இடதுசாரி கட்கள் போராட்டத்தை நடத்தியிருந்தன. இந்த சூழலில்தான் சிடிஆர் நிர்மல் குமார் மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார்.