தமிழக செய்திகள்

பசுமை வழிச்சாலை - மந்தைவெளி இடையே சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்த 'வைகை' எந்திரம்

மெட்ரோ ரெயில் பணியில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் பசுமைவழிச் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த சுரங்கப்பாதை பணிகளுக்கு 'நொய்யல்' மற்றும் 'வைகை' என பெயரிடப்பட்ட 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதில், வைகை என்ற சுரங்கம் தோண்டும் எந்திரம் பசுமை வழிச் சாலையில் இருந்து 775 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி நேற்று மந்தைவெளி நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து, மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சுரங்கம் தோண்டும் எந்திரம் 75 கட்டிடங்களுக்கு கீழ் பயணித்துள்ளது. மந்தைவெளி பகுதியில் இருந்த கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் காரணமாக சுரங்கப் பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது. இதேபோல, 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரமான நொய்யல் அடுத்த மாதம் மந்தைவெளி நிலையத்தை வந்தடையும்.

இந்த மாதத்தில் மட்டுமே ஆர்.கே.சாலை, கோடம்பாக்கம், மந்தைவெளி ஆகிய 3 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பல சுரங்கம் தோண்டும் எந்திரங்களின் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு