தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைக்க அனுமதிக்க கூடாது: முதல்-அமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள்.

13 பேர் சுட்டுக்கொலை:

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது. ஸ்டெர்லைட் வழக்கு உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானமும், நீதியரசி பவானி சுப்புராயனும் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.

இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி அங்கலாய்த்துக் கொண்டார். அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே? தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்க திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி உண்மையாக இருக்குமானால் அதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருக்க முடியாது.

வேண்டுகோள்:

தமிழக முதல்-அமைச்சர், வேதாந்தா குழுமம் ஆலை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக மக்கள் நலனைக் காக்கவும், குறிப்பாக தூத்துக்குடி மண்டல மக்கள் நலனைக் காக்கவும் ஆன கடமை உணர்ச்சியோடு இந்த வேண்டுகோளை முதல்-அமைச்சர் முன் வைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.