சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் 144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று மே 1-ம் தேதி சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,239 ரூபாயாக விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க - ஈரான் போரால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை ஒரேயடியாக சுமார் 1,000 ரூபாய் அதிகரித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு வினியோகம் தடைப்பட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.