சென்னை,
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி இளைஞர்கள் போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன; டெல்லியிலே சிறுதுளியின் அடுத்த நிலை என்ன என்பதைப் பழமொழி அறிந்தவர்கள் அறிவார்கள். மழை வெள்ளத்திலும் வலியது மனித வெள்ளம். வங்கதேசமும் நேபாளமும் இலங்கையும் அந்த வெள்ளத்தில் மூழ்கிய கதை மூத்தவர்கள் அறியாததில்லை.
ஆர்ப்பாட்டம் அடங்கவும் அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு நீட் தேர்வின் நிரந்தர நீக்கம்தான். அரசுக்கு அது பின்னடைவாகிவிடும் என்று பேசப்பட்டால் சமரசத் தீர்வு ஒன்றும் இருக்கிறது. அதுதான் நீட் தேர்வை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது. இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.