கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வகுப்பறை முன்பு மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது - வானதி சீனிவாசன்

ஆசிரியர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வகுப்பறை முன்பு மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பெற்றோர்களிடத்திலும், கல்வியாளர்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் மதுரை விரகனூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரை ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்குவதும், தரக்குறைவாக பேசியதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவமும் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மாண்பையே சீர்குலைத்துள்ளது.

மாற்றம் தருவோம்... மாற்றம் தருவோம் என்று மேடைக்கு மேடை முழங்கி அரியணை ஏறிய தவெக ஆட்சியின் சூப்பரான மாற்றம் இதுதானா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..? மாணவர்கள் வகுப்பறையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும், ஆயுதங்ளைக் கொண்டு வருவதும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும் பெருகி வருவது கவலை அளிக்கும் செயல்.

எத்தனையோ அரசு பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வரும் வேளையில் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் பெயரையே அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தவெக ஆட்சியில் பள்ளிகளில் என்றைக்கு ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்ததோ அன்றே அறநெறி வகுப்புகளும், கடும் கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்து விட்டது என்பதுதான் உண்மை.

பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும், கீழ்படிதலும்தான் என்பதை நினைவில் நிறுத்தி இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.