கோவை,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்பொழுது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த நான்கு தினங்களாக தீவிரமான பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் பிரசாரத்தின் போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கால் வலி காரணமாக ஆன்டிபயாடி மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்கள் ஒய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது.
இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கையானது வெளியிட்டுள்ளது. அதில் வானதி சீனிவாசனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதாகவும், உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதே வேளையில் அவர் மேலும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கபட வேண்டிய நிலை இருக்கும் என்ற ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் வானதி சீனிவாசன் அடுத்து அடுத்து பிரசாரத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வானதி சீனிவாசனுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் வடக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இன்று நடந்த பிரசாரத்தில் நான் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையிலும் எனக்காக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த அன்பு தம்பி அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி.
வாக்களியுங்கள் தாமரைக்கு வரலாற்று வெற்றியை கொடுப்போம் என்று தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.