வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம் கீழ்ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் தனது குடும்பத்துடன் காரில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். காரை அவரின் நண்பர் வினோத்குமார் ஓட்டினார். கார் வாணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் நின்றிருந்த ஒரு லாரி மீது மோதியது.
அதில் காரில் பயணம் செய்த காந்திமதி (வயது 30) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த சுரேஷ் உள்பட 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து வந்து காந்திமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.