தமிழக செய்திகள்

திருமாவளவன் எம்.பி சென்ற காரில் தொங்கியபடி பயணித்த வி.சி.க நிர்வாகி

கடலூரை சேர்ந்த வி.சி.க. நிர்வாகி ஒருவர், கட்சி தொடர்பாக தலைவர் திருமாவளவனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் சுட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தொல். திருமாவளவன்

அவர் கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் உளுந்தூர்பேட்டையில் நடக்க உள்ள மாநாடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.

தொங்கியவாறு பயணம்

அப்போது அங்கு நின்றிருந்த கடலூரை சேர்ந்த வி.சி.க. நிர்வாகி ஒருவர், கட்சி தொடர்பாக தலைவர் திருமாவளவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் டிரைவர் காரை இயக்கி விட்டார். திருமாவளவனிடம் பேசி கொண்டிருந்த நிர்வாகி, உடனே காரின் ஜன்னலை கையால் பிடித்து கொண்டு அதில் தொங்கியவாறு சென்றார்.

கார் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நிர்வாகி, காரில் தொங்கியபடியே திருமாளவனிடம் பேசிக் கொண்டே சென்றார். சுமார் 100 மீட்டர் தொலைவு வரை கார் சென்று கொண்டிருந்த நிலையில், உடனடியாக திருமாவளவன் கார் டிரைவரிடம் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

இதை தொடாந்து சாலை ஓரமாக கார் நிறுத்தப்பட்டு அந்த நிர்வாகியை அங்கு இறக்கி விட்டனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.