தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார்.
அவரை சூழ்ந்துகொண்ட மாணவியின் உறவினர்கள், நேற்று ஏன் நீங்கள் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பிறகு, மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “எரிவாயு உருளை தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, எரிவாயு உருளை தட்டுப்பாடு இருப்பதாக ஒரு நிலை உருவாகி இருக்கிறது. முக்கியமாக உணவகங்கள், தங்கும் விடுதிகள் அங்கெல்லாம் தட்டுப்பாடு இருப்பதால் அதை முன்னிட்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வீடுகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தாலும் வீடுகளில் பல பேர் இணையதளம் மூலம் பதிவு செய்ய முயற்சி செய்யும்போது கிடைக்கவில்லை என புகார் இருக்கிறது. இந்த குழப்பங்களையும் பிரச்சினைகளையும் விரைவில் ஒன்றிய அரசாங்கம் தீர்வு காண வேண்டும்” என்றார்.
பின்னர் கப்பல்கள் மூலம் எரிபொருள் வந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது என்ற கேள்விக்கு, அப்படி சொல்லி இருந்தால் உண்மையிலேயே தவறான ஒன்று, அப்படி சொன்னார்களா என தெரியவில்லை. தற்போது நிலவி வரும் போர் சூழலில் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசாங்கத்திற்கு இருக்கிறது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசாங்கத்திற்கு உள்ளது என்றார்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை. வந்த பிறகு அறிவிக்கப்படும் என்று கனிமொழி கூறினார்.
விளாத்திகுளம் பள்ளி மாணவி உயிரிழந்தது சம்பந்தமாக கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை முழுமையான அறிக்கை வெளியாகவில்லை. நிச்சயமாக இளம் பெண் உயிரை எடுப்பது என்பது கொடுமையான சம்பவம். முதல்-அமைச்சர் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.
காவல்துறையினர், ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பிக்கள், 6 ஆய்வாளர்கள் மற்றும் 10 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கனிமொழி தெரிவித்தார்.