கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்துவிடப்பட்டு வீணாக கடலில் கலந்தது.
நீர்மட்டம் குறைந்தது
இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 40 அடி.
சென்னைக்கு வினாடிக்கு 77 கனஅடிக்கு பதில் வினாடிக்கு 67 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
67 கனஅடியாக குறைப்பு
இதுகுறித்து வீராணம் ஏரி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40 அடியாக உள்ளது. நீர்மட்டம் 39 அடி வரும் வரையில் சென்னைக்கு குடிநீர் அனுப்பலாம். நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவை குறைத்துள்ளோம்.
வினாடிக்கு 77 கன அடி வீதம் அனுப்பப்பட்ட தண்ணீர் தற்போது சென்னைக்கு வினாடிக்கு 67 கனஅடி வீதம் அனுப்புகிறோம். தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும். ஆனால் சிலர் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.