தமிழக செய்திகள்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நாளை தொடக்கம்

நாளை (சனிக்கிழமை) முதல் ரெயில் சேவை இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில்களை இயக்குவதற்கான 'தற்காலிக அதிகாரப்பூர்வச் சான்றிதழை' ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் வழங்கியிருப்பதாகவும், நாளை (சனிக்கிழமை) முதல் ரெயில் சேவை இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

பாதுகாப்பு கமிஷனர் வழங்கிய வழிக்காட்டுதல்களின்படி ரெயில்வே நிர்வா கம் தரப்பிலான அனைத்து கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரெயில் உள்கட்டமைப்பின் மேல் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாரங்களை அகற்ற அறிவுறுத் தப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் வகையில், இந்த பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 24 மணிநேர அவகாசம் கோரியுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும். நாளை முதல் பறக்கும் ரெயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

எத்தனை சேவைகள் என்பதன் விவரம் வருமாறு:-

சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இருமார்க்கமாகவும் 86 சேவைகள், கடற்கரை- வேளச்சேரி இடையே இருமார்க்கமாகவும் 4 சேவை, பரங்கிமலை-வேளச்சேரி இடையே இருமார்க்கமாகவும் 6 ரெயில் சேவைகள் என மொத்தம் இந்த வழித்தடங்களில் 96 சேவைகள் தினந்தோறும் இயக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.