தமிழக செய்திகள்

வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் - கொலையா? போலீசார் விசாரணை

தினேஷ் கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பவில்லை.

வேலூர்,

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், தினேஷை கண்டுபிடிக்க முடியாததோடு அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதையடுத்து தினேஷை கண்டுபிடித்து தரக்கோரி விரிஞ்சிபுரம் போலீசில் தினேஷின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தினேஷின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து. அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.