தமிழக செய்திகள்

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்.2-ந்தேதி தீர்ப்பு

ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு அறிவிப்பதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

சென்னை,

கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கெனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று மீண்டும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது மாவட்ட இரு தரப்பு வாதம் நிறைவடைந்ததால் இவ்வழக்கில் தீர்ப்பினை ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிப்பதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்தார்.