தமிழக செய்திகள்

துணைவேந்தர் நியமனம்: குழு அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட் டில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'தமிழ்நாட் டில் உள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் இந்த ஆண்டின் இறுதியில் காலியாக உள்ளன.

தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அரசியல் சாசன அதிகார அமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்காளத்தில் இதேபோன்ற சூழல் நிலவியபோது. சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையில் குழு அமைத்து துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தள்ளிவைப்பு

அதுபோல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதியையும் சேர்த்து உயர்மட்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர். 'இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக்குழு பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.