சென்னை,
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகிறார். கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா வால்வ்ஸ்-2026 தேசிய கல்வி கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா வால்வ் பதிவேட்டை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவிலும் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.
துணை ஜனாதிபதி வந்து செல்லும் மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டல பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டர்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றை சென்னை பெருநகரில் பறக்கவிட தடை செய்யப்பட்ட ஆணை நடைமுறையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.