துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 
தமிழக செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகை

நாளை துணை ஜனாதிபதியின் கோவை வருகையை முன்னிட்டு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை,

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை கோவைக்கு வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் மாநாடு ஒன்றில் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார்.

'உபாசி' நூற்றாண்டு மாநாடு

தென்னிந்தியாவின் தேயிலை தொழிலுக்கு சேவையாற்றி வரும் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாடு குன்னூரில் நாளை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

1926-ல் தொடங்கப்பட்ட நிறுவனம்

கடந்த 1926-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு சிறிய தேயிலை சோதனை நிலையமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் கீழ், தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகப் பாடுபடும் சர்வதேச அளவிலான முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர்.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவையில் டிரோன்கள் பறக்க தடை

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவைக்கு வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இன்று மாலை 5 மணி முதல் வருகிற 22-ந் தேதி காலை 11 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன், காளப்பட்டி 4 ரோடு சந்திப்பு, கோவில்பாளையம், அன்னூர் பஸ் நிலையம், தென்திருப்பதி 4 ரோடு ஆகிய இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வனக்கல்லூரி விருந்தினர் இல்லம், குஞ்சப்பனை மாவட்ட எல்லை. கஞ்சப்பள்ளி, கரியம்பாளையம் சந்திப்பு. கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் சிங் காநல்லூர், பீளமேடு, சித்ரா, நேரு நகர், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நவ இந்தியா, இருகூர் பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குன்னூரிலும் தடை

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT