திருமாவளவன் பிறந்தநாள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் நேற்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் கழகத்தில் தனது தந்தை தொல்காப்பியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் கேக் வெட்டி தொண்டர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அதேபோல அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகம், வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். இதில் கட்சியின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள்
தொல்.திருமாவளவனுக்கு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், சிறுபான்மை நலவாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருமாவளவன் பிறந்தநாளை, அக்கட்சி நிர்வாகிகள் ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.