தமிழக செய்திகள்

“சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க விஜய்-பா.ஜனதாவினர் நாடகம்” சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜனதாவுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நெல்லை,

நெல்லையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மராட்டிய துணை முதல்-அமைச்சர் அஜித் பவார் மறைவுக்கு சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட சபையில், மரபுப்படி தயாரித்துக் கொடுத்த உரையை வாசிப்பதுதான் கவர்னரின் வேலை. ஆனால், அவர் அதைச் செய்யாமல் வெளியேறியது மரபல்ல. அவருக்கு சொந்த கருத்துக்களை பேசவோ, தவிர்ப்பதற்கோ அதிகாரம் இல்லை. தி.மு.க. கூட்டணி தொடர்பான விவகாரங்களை தலைமை மட்டுமே பேச வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யும், பா.ஜனதாவினரும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள். இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக இணைந்து, தி.மு.க.விற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜனதாவுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க, வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசியை பயன்படுத்துவது போல், தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பா.ஜனதா பயன்படுத்துகிறது. ஆனால், சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜனதா ஆதரவு சக்திகளுக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.