புதுச்சேரி,
தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பூ புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த முறை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் இந்த முறை ஏன் தேர்தலில் நிற்க வில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து குஷ்பூ பேசுகையில் நான் தேர்தலில் போட்டியிட்டால் இப்போது உங்கள் முன்னால் இருக்க முடியாது. நான் ஒரு சராசரி காரியகர்த்தாவாக வெளியே செல்ல வேண்டும்.
இந்த முறை தேர்தலில் மதுரையில் என்னுடைய கணவர் போட்டியிடுகிறார். நான் அங்கேயும் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி, , தமிழ்நாடு, கேரளா என பரப்புரைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. கேரளாவில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பின் மதுரையிலும் இரண்டு நாட்கள் தேர்தல் பரப்புரைக்கு சென்று வந்துள்ளேன்.
இனி மறுபடியும் மதுரைக்கு சென்றுவிடுவேன். இரண்டு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கண்டிப்பாக வெற்றி உறுதியாக உள்ளது. நேற்று தேர்தல் பரப்புரைக்கு புதுச்சேரிக்கு வந்த தவெக தலைவர் விஜய் பாஜகவை குழம்பியிருக்கும் கூட்டணி என்று பேசியுள்ளதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு நேற்று தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார், அதனால் அவரை விட்டுவிடுங்கள். அரசியல் நன்றாக தெரிந்தவரை பற்றி நாம் பேசலாம் என்றார்.
நேற்று பிரசாரத்திற்கு மணலி தொகுதியில் கூட தவெக வேட்பாளருக்கு ஓட்டு கேட்காமல் பாஜக வேட்பாளர் செல்வம் பெயரை கூறி வாக்கு சேகரித்துள்ளார். விஜயின் மனதில் பாஜக தான் உறுதியாக இருக்கிறது. அதுவரைக்கும் எங்களுக்கு சந்தோஷம் என்றார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.