சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சராக பதிவியேற்கும் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜயின் தாயும், பாடகியுமான ஷோபா கூறியதாவது:-
அன்னையர் தின வாழ்த்து. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் நல்லாட்சி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவை திரும்பி பார்க்கும் பொற்கால ஆட்சியை விஜய் தரணும் என்றார்.