தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்கும் நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 12 இணை ஆணையர் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேரு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக வெளியானது அமைச்சரவை பட்டியல்
விஜய்யுடன் சேர்த்து அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்கும் நிலையில் அவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார்.ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்கின்றனர்.
விஜய் அளித்த 9 பேர் அமைச்சரவை பட்டியலை ஏற்று கொண்டதாக கவர்னர் மாளிளை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நாளை பதவியேற்கின்றனர். மே 13-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு கவர்னர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தார் ராகுல் காந்தி
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்காக கவர்னர், 'ஐ' (நான்) என்று ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணத்தை தொடங்கி வைத்ததும், விஜய் தமிழில், 'சி.ஜோசப் விஜய் எனும் நான்...' என்று உறுதிமொழியை வாசிப்பார். அதுபோல ரகசிய காப்பு உறுதிமொழியையும் கவர்னர் தொடங்கி வைக்க, விஜய் அதை தொடர்ந்து படிப்பார்.
விஜய் வாயில் இருந்து ஒலிக்கப்போகும் இந்த வார்த்தைக்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் நீண்ட நாளாக காத்திருந்தனர். அவர்களது கனவு இன்று நிறைவேறப்போகிறது. விஜய்யை தொடர்ந்து. அவரது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை வாசிப்பார்கள்.
முன்னதாக தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் விருந்தினர் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படும்.
பின்னர் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து நேராக தலைமைச்செயலகம் செல்வார்கள். அங்கு முதல்-அமைச்சர் அறையில் உள்ள இருக்கையில் விஜய்யை மூத்த அமைச்சர்கள் அமர வைப்பார்கள்.
த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ளவருமான விஜய், தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று ஜவஹர்லால் நேரு மைதானத்தில் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று அன்னையர் தினம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...” என்று கூறினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பாஸ் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கு அமைந்துள்ள பெரியமேடு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் இல்லாதவர்கள் வருவதை தடுக்க சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ஆதவ் அர்ஜுனா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்று தமிழக முதல்-அமைச்சராகப் பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்யின் சென்னை இல்லத்தில் கான்வாய் வாகனங்கள் வருகை தந்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விஜய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து கிளம்பி உள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1. அண்ணாநகர் டவர் பார்க்
2. மெரினா கடற்கரை
3. கோயம்பேடு பேருந்து நிலையம்
4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம்
5. தி.நகர் பேருந்து நிலையம்
6. பெசன்ட் நகர் கடற்கரை
7. திருவான்மியூர் பேருந்து நிலையம்
8. கத்திபாரா நகர சதுக்கம்
9. செம்மொழிப் பூங்கா
10. தீவு திடல் பேருந்து நிறுத்தம்
11. நாகேஸ்வரராவ் பூங்கா
12. மயிலாப்பூர் டேங்க் ஏரியா
13. வடபழனி பேருந்து நிலையம்
14. எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி
15. சோழிங்கநல்லூர் சந்திப்பு
16. மாதவரம் பேருந்து நிலையம்
17. போரூர் சந்திப்பு
18. அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்
19. தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பகுதி
20. அடையாறு டிப்போ சந்திப்பு
மேற்கண்ட இடங்களில் எல்.இ.டி திரையின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.
த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன.
தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.
இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.
இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டது.