சென்னை,
த.வெ.க.-108:
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியானது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டி இருப்பதால் த.வெ.க.வின் பலம் 107 ஆக இருந்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை.
எனவே த.வெ.க., தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சரவையிலும் இடம்பெறுவோம் என்று தெரிவித்தது. அந்த கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த ஆதரவு கடிதத்துடன் தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க 2 முறை உரிமை கோரினார். ஆனால் போதிய பெரும்பான்மை இல்லை என்று கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விஜய் பதவி ஏற்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் த.வெ.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளித்ததன் மூலம், த.வெ.க.வின் பலம் 116 ஆக உயர்ந்தது. இதையடுத்து 3-வது முறையாக நேற்று முன்தினமும் கவர்னரை விஜய் சந்தித்தார். ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
திருமாவளவன்:
த.வெ.க. ஆட்சி அமைக்க மேலும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை பெற த.வெ.க. தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருமாவளவன் தரப்பில் தொடர்ந்து மவுனம் காக்கப்பட்டது. இது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது. திருமாவளவன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. திருமாவளவன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. தங்களது முடிவை, மாலை 4 மணிக்கு மேல் தெரிவிப்பதாக வி.சி.க. தெரிவித்தது. அதனால் அடுத்து என்னாகும்? என பதட்டம் நீடித்தது.
பெரும்பான்மை கிடைத்தது:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அதே போல் நீலாங்கரை மற்றும் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அடுத்தடுத்து கட்சியினருடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். மாலை 4.30 மணியளவில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்தது. இதற்கான ஆதரவு கடிதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் இருந்து, த.வெ.க. தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பெற்றார். த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் த.வெ.க.விடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை முதல்-அமைச்சர், அமைச்சர் பதவி கேட்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு மூலம் நேற்று காலை முதல் மாலை 4.30 மணி வரை நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. த.வெ.க. பெரும்பான்மைக்கான பலமான 118-யை அடைந்தது.
எதிர்பாராத 120:
த.வெ.க.வுக்கு இதுவரை ஆதரவு இல்லை என்று கூறி வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நேற்று மாலை திடீரென்று த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. எதிர்பாராத இந்த ஆதரவின் மூலம் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்தது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டிய எண்ணிக்கையாகும்.
இதற்கிடையில் நேற்று இரவு கவர்னர் கேரளா செல்வதாக தகவல் இருந்தது. எனவே விஜய், உடனடியாக பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து கவர்னர் அர்லேகரை சந்திக்க மக்கள் மாளிகைக்கு அவசர, அவசரமாக மாலை 4.30 மணியளவில் புறப்பட்டார். அவரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்களும் மக்கள் மாளிகைக்கு வந்தனர். ஆனால் அவர் பாதி தூரம் சென்ற நிலையில் அவருக்கு கவர்னர் சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல் விஜய் தரப்புக்கு எட்டியதால், அவர் பாதி வழியிலேயே “யு டர்ன்” அடித்து மீண்டும் பட்டினபாக்கம் இல்லம் வந்தார். அதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கவர்னர் அர்லேகர், திடீரென்று தனது கேரள பயணத்தை ரத்து செய்ததோடு, விஜய் தன்னை சந்திக்க அனுமதி அளித்தார்.
கவர்னர் ஒப்புதல்:
தமிழக கவர்னர் அர்லேகர் விஜய்யை சந்திக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து விஜய் மீண்டும் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் 4-வது முறையாக மக்கள் மாளிகைக்கு வந்தார். அங்கு ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்களுடன் கவர்னர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான 120 எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பட்டியலை வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 1.40 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. பின்னர் கவர்னர் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், அவரை முதல்-அமைச்சராக நியமித்து ஆணை வழங்கினார். இதையடுத்து விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கான விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. கவர்னர் அர்லேகர், விஜய்க்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். விஜய்யுடன் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள்.
விஜய் பதவியேற்பு விழா நேரலை: சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1. அண்ணாநகர் டவர் பார்க்
2. மெரினா கடற்கரை
3. கோயம்பேடு பேருந்து நிலையம்
4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிட்ரல் ரெயில் நிலையம்
5. தி.நகர் பேருந்து நிலையம்
6. பெசன்ட்நகர் கடற்கரை
7. திருவான்மியூர் பேருந்து நிலையம்
8. கத்திபாரா நகர சதுக்கம்
9. செம்மொழிப் பூங்கா
10. தீவு திடல் பேருந்து நிறுத்தம்
11. நாகேஸ்வரராவ் பூங்கா
12. மயிலாப்பூர் டேங்க் ஏரியா
13. வடபழனி பேருந்து நிலையம்
14. எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதி
15. சோழிங்கநல்லூர் சந்திப்பு
16. மாதவரம் பேருந்து நிலையம்
17. போரூர் சந்திப்பு
18. அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம்
19. தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பகுதி
20. அடையாறு டிப்போ சந்திப்பு
ஆகிய மேற்சொன்ன இடங்களில் எல்.இ.டி. திரையின் மூலம் பதவியேற்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.