சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூரில் நாளை விஜய் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நாளைய பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டக்குடி, நெய்வேலி, வடலூரில் நாளை பிரசாரம் செய்ய உதயநிதி ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.