தமிழக செய்திகள்

விஜய்க்கு ஆள் உயர மாலை அணிவிப்பு: த.வெ.க. மாவட்ட செயலாளர் உள்பட 3 போ கோர்ட்டில் சரண்

கிரேன் எந்திரம் மூலம் ஆள் உயர மாலை விஜய்க்கு அணிவிக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் தெற்கு வீதியில் கடந்த 20-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் திருவாரூர் நகரம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டன.

திருவாரூருக்கு விஜய் வந்தபோது திருவாரூர் பனகல் சாலை அழகிரி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் கிரேன் எந்திரம் மூலம் ஆள் உயர மாலை விஜய்க்கு அணிவிக்கப்பட்டது. இந்தநிலையில் திருவாரூர் டவுன் போலீசார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் மாவட்ட செயலாளர் மதன், கிரேன் எந்திரத்தின் உரிமையாளர் ராஜேஷ், கட்சி உறுப்பினர்கள் அன்பு மற்றும் மனோ ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் லிஷி முன்னிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதன், கட்சி உறுப்பினர்கள் மனோ, அன்பு ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT