சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.
தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னரை சந்தித்த விஜய், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், த.வெ.க. தலைமையிலான அரசு நாளை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கவர்னர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிலையில், விஜய்யின் பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
நாளை காலை 8.30 மணியளவில் அவர் சென்னை வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 1967-க்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க உள்ளது. த.வெ.க.வின் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.