விழுப்புரம்,
சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிளினிக்கில் வேலை முடிந்ததும் வாடகை காரில் புருஷோத்தமன் சென்னைக்கு புறப்பட்டார்.
அந்த காரை துறையூரை சேர்ந்த பிரவீன்(30) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே பலப்பட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு சாலையோரத்தில் இருந்த மரத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே டாக்டர் புருஷோத்தமன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த டிரைவர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புருஷோத்தமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த புருஷோத்தமன் ஓய்வு பெற்ற அரசு டாக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.