சென்னை,
தமிழகம் முழுவதும் நாளை (திங்கள் கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பல்வேறு இந்து அமைப்பினரும், பக்தர்களும் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை நிறுவியுள்ளனர்.
இதையொட்டி நகரங்களில் உள்ள போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்பு தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் பணிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல் நகருக்குள் வந்து செல்லும் வாகனங்கள், விநாயகர் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் போலீசார் கடும் கட்டுபாடுகள் விதித்துள்ளனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை அதிகாரிகள், சமூக அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைப்பதற்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரியவகை ஆமைகள் பாதிக்கப்படும் என்பதால் பட்டினப்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கப் பசுமைதீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தாண்டு சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் சோதனைச் சாவடிகளும், கூடுதலாக 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 14 இடங்களில் புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் சனிக்கிழமை இரவு முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.