தமிழக செய்திகள்

விருதுநகர்: கத்திமுனையில் பெண்ணிடம் 25 சரவன் நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் அணிந்திருந்த சங்கிலி உள்பட 25 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி அன்னலட்சுமி (வயது 50). நேற்று மதியம் அன்னலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார்.

கத்தி முனையில் 25 சவரன் நகைகள் பறிப்பு

அப்போது 2 பேர் அவரது வீட்டிற்கு வந்து, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். உடனே அன்னலட்சுமி தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் நைசாக அன்னலட்சுமியை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காண்பித்து மிரட்டினர். அன்னலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி உள்பட 25 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.