தமிழக செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நாட்டையே உலுக்கிய இந்த பட்டாசு விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது

விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரியின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 5 அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்ததாக தெரிகிறது

கடந்த 19 ஆம் தேதி காலையில் அந்த ஆலைக்கு ஆண்களும், பெண்களுமாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் மும்முரமாக இருந்த நிலையில், பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது

இதனைத்தொடர்ந்து அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. உடனே அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் தீ பரவி, அந்த அறைகளில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் 25 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த பட்டாசு விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.. ஊடகங்களில் வந்த தகவல் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், காயமடைந்தவர்களின் நிலை, விசாரணை முன்னேற்றம் ஆகியவை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் விருதுநகர் காவல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது