விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என அந்தப் பகுதி பொதுமக்களும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் முறையான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் தற்பொழுது போதிய அளவில் இல்லை என கூறப்பட்டது. மேலும், பள்ளிக்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி நேரங்களிலும், அதற்குப் பிறகும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வசதிகள் குறைபாட்டின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தொடர்ந்து குறைந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிக்குத் தேவையான நிதியை ஒதுக்கி, உடனடியாக சுற்றுச்சுவர் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.