தமிழக செய்திகள்

ஊராட்சி மன்றங்களுக்கு மானிய உதவிகள் வழங்காததால் பணிகள் முடங்கி கிடக்கின்றன - வைகோ குற்றச்சாட்டு

ஊராட்சி மன்றங்களுக்கு மானிய உதவிகள் வழங்காததால் பணிகள் முடங்கி கிடக்கின்றன என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பொறுப்பு ஏற்று 10 மாதங்கள் கடந்து விட்டன. ஊராட்சி மன்றங்களுக்கு, மாநில நிதிக்குழு மானியம் வழங்கினால்தான், குடிநீர், மின்விளக்கு பணிகளை மேற்கொள்ளமுடியும். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். ஆனால், 10 மாதங்கள் ஆகியும், மானிய உதவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடங்கிக்கிடக்கின்றன. அது மட்டும் அல்ல. மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு உரிய நிதியினையும் வழங்காமல் காலம் கடத்தி வருவது, மத்திய-மாநில அரசுகள் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே காலம் கடத்தாமல் மாநில நிதிக்குழு மானியத்தையும், மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியினையும் மத்திய-மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.